Tuesday, March 31, 2009

[vallalargroups:1337] வாழ்வில் துனபம் நீங்கி இன்பமாக வாழ வேண்டுமா?

வாழ்வில் துனபம் நீங்கி இன்பமாக வாழ வேண்டுமா?

உலகம் தோன்றியது முதல் அதில் மனித உயிர்கள் உருவான பின்தான் இறைவன் பற்றிய சிந்தனை வந்தது. துவக்கக் காலத்தில் வாழ்ந்த மனித இனம் இடி, மின்னல் போன்றவையே கடவுள் என நினைத்து வணங்கினர். பின் படிப்படியாக ஞான நிலையை உணர்ந்த சான்றோர்களும், ஞானிகளும் தான் பெற்ற சொற்ப அனுபவத்தை மக்களிடம் கூறி அதுவே பூரண இறை கொள்கையாக கூறிச் சென்றனர்.
 
இவ்வுலகில் பல சாதி, சமய நிலைகளில் எண்ணற்ற உருவங்களை உருவாக்கி மக்கள் உருவ வழிபாட்டில் அதிகம் கவனம் செலுத்த வழி வகுத்து விட்டனர் ஞானிகள். அதனால் அவ்வழியே சரியென நினைத்து மக்களும் புறவழிபாடாகிய அபிசேகம், பூஜை முறைகள், ஆராதனைகளுடன் இருந்து விட்டனர்.
 
இந்த வழிபாடு காலப்போக்கில் மிகவும் மாறுதுல் அடைந்து, சாதி, மத, சமய வழக்கமாகி மக்களை மேலும் அறியாமை நிலைக்கே தள்ளிவிட்டது. இந்நிலையிலிருந்து மனித குலத்தை மீட்க திருமூலர், திருவள்ளுவர் போன்ற சுத்த ஞானிகள் பெருவாராக முயற்சித்தனர். அவர்கள் எழுதிய பாடல்களைப் பார்த்தாலே இது நன்கு விளங்கும். மனித சமுதாயம் ஜாதி, மத பேதங்களால் பிரிவு பட்டே இருப்பதை எண்ணி 1823 ஆம் ஆண்டு இவ்வுலகிற்கு இறைவனால் வருவிக்கவுற்ற அருள் சித்தர் என்று போற்றப்படும் திருவருட்பிரகாச வள்ளலார் உலகிற்கே ஒரு பொதுநெறியை வகுத்தார். அதுதான் சமரச சுத்த சன்மார்க்கமெனும் உயர்நெறி. இந்த நெறிக்கு சாதி, சமய, உருவ வழிபாடுகள் தேவையில்லை. உயிர் இரக்கமும், ஒழுக்கமுமே இறைவனை உணர்ந்து அருள்பெற சிறந்த வழியென உரைக்கும் ஒரு உயர்மார்க்கத்தை இவ்வுலகிற்கு கொடுத்தார்.
 
இறைவன் அருள் நிறைந்த ஜோதி வடிவானவன். உலகில் தோன்றிய மதங்கள் அனைத்தும் போற்றக் கூடிய தெய்வம். உலக உயிர்களின் துன்பத்தை நீக்கி நலம் கொடுக்கும் தெய்வம். ஒவ்வொரு மனிதனையும் ஆணவம், கன்மம் (முற்பிறவியால் ஏற்பட்ட வினைப்பயன்கள்) மாயை (அறியாமை) நீங்க சிவம் என்ற மாசற்ற குற்றமற்ற ஒளி நிலைக்கு உயர்த்தக்கூடிய தெய்வம்.
 
சரி அந்த தெய்வத்தை அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?
 
பொத்திய மலப்பிணிப் புழுக்குரம்பைதான்
சித்தியல் சுதத சன்மார்க்கச் சேர்ப்பினால்
நித்திய மாகியே நிகழும் என்பது
சத்தியம் சத்தியம் சகத்துளீர்களே.
 
என வள்ளற்பெருமான் உறுதியாகக் கூறுகிறார். உண்மையான சன்மார்க்க நெறியில் வாழவேண்டும் எப்படி?
 
கொலை, புலை தவிர்த்து, சாதி, சமய, ஆசாரங்களில் அதிக நாட்டம் இல்லாது ஜீவகாருண்யமாகிய ஏழை எளியவர்க்கு அவரவர் தரத்திற்கு ஏற்றாற்போல் பசி தவிர்த்தல் செய்து, இந்திரிய கரண ஒழுக்கங்களை முறையாக கடைப்பிடித்து வாழ வேண்டும்.
 
இந்திரிய, கரண ஒழுக்கங்களை எப்படி கடைப்பிடிப்பது?
 
கொடிய சொல் செவி புகாவண்ணம், இறைவனைப் பற்றி (அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் புகழ்பாடுதல், கேட்டல், அசுத்த பரிசமில்லாது தயாவண்ணமாய் பார்த்தல் - அதாவது உலகியலில் பழகும் பொழுது ஆண் மீது பெண்ணும், பெண் மீது ஆணும் இச்சை கொள்வது இயற்கை. இருப்பினும் இது போன்ற உணர்வுகளை தவிர்த்து பார்வையை செலத்துதல். இன் சொல்லாடல் - எப்பொழுதும் அன்புடன் நற்சிந்தனை உடைய சொற்களையே சொல்லுதல் - உரத்துப் பேசுதல், சண்டையிடுதல், சந்தேகம் கொண்டு கடுஞ்சொற்களை கூறுதல் போன்ற தேவையற்ற சொற்களை கூறாது வாழ்தல். சுகந்தம் விரும்பாதிருத்தல் – வாசனை திரவியங்களை உபயோகிக்கக் கூடாது. அவற்றின் நறுமணத்தை ஊன்றி நுகருதல்கூடாது. (ஆடம்பரமான வாழ்வியல் கூடாது.) ஜீவ உபகார நிமித்தமாய் சாதுக்கள் வாச்ஸ்தலங்களில் சஞ்சரித்தல் – உலகியலில் மனச் சோர்வு ஏற்படும் போது, அன்புள்ளம் கொண்ட சாதுக்கள் வாழும் இடம் சென்று வருதல், இயலாதபட்சத்தில் ஆதரவற்ற ஏழை எளியவர் வாழும் இடம் சென்று தொண்டு செய்தல் (உணவளித்தல்) உலகியல் செயல்களில் ஈடுபடும் போது, அச்செயலால் நமக்கும் பிறருக்கும் நன்மை பயக்கும்படி நடந்துக் கொள்ளுதல்.
 
மனிதன் துன்பப்பட இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அறியாமை. மற்றொன்று ஆசை, பேராசை. இதில் அறியாமையை நீக்க கல்வி மற்றும் நல்ல கருத்துக்களை கற்றும், படித்தும், கேட்டும் தெளியலாம். ஆசை இது மனித வாழ்வியலுக்கு ஓரளவு தேவை. ஆனால் பேராசை இது மனித வாழ்வியலுக்கு தேவையற்றது. மனிதனை துன்பக்கடலில் ஆட்படுத்தும். இந்த ஆசை, பேராசை, அறியாமையுடன் - சாதி, சமய, பற்றுகள் சேர்ந்ததனால் மக்கள் படும் இன்னல்களுக்கு அளவே இல்லை.
 
எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே
எல்லாம் வல்லான் தனையே ஏத்து.
 
என வள்ளற்பெருமான் கூறுகிறார். அதாவது, துன்பங்களிலிருந்து மனிதன் விடுபட இறைவனின் பாதங்களில் பணிய வேண்டும்.
 
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
 
அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்.
 
ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்பு செயல்வேண்டும்.
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை நினதருட்புகழை இயம்பி யிடல் வேண்டும்.
செப்பாதமேனிலைமேல் சுத்த சிவமார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவ நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே!
 
என பாடல் மூலம் தெளிவுபட கூறுகிறார். மனிதன் தான் வாழ பிற உயிர்களைக் கொன்று அவற்றின் புலால் உண்பதால், ஆன்மநேய சகோதரத்துவத்திற்கு விரோதமாக நடந்து கொள்கிறான்.
 
அதாவது, உலகில் தோன்றிய உயிர்கள் அனைத்தும் நமது சகோதரர்கள் என்ற எண்ணம் மேலோங்க வேண்டும். அதற்கு நாம் பிற உயிர்களைக் கொன்று அவற்றின் புலால் உண்ணக் கூடாது. தெய்வ வழிபாடு எனக் கூறி உயிர்களை பலியிடக் கூடாது.
 
தன்னூன் பெருக்கற்குத் தான் பிறிது ஊணுன்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
 
உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் உரு.
 
என வள்ளுவப் பெருந்தகையும் கூறுகிறார். முதற் குறளில் பிற விலங்கின் புலால் உண்பவர்களை அருள்நாடி வராது என்பார். இன்றைய காலத்தில், எங்கு பார்த்தாலும் இதய நோய், சிறுநீரகச் செயலிழப்பு, புற்றுநோய், கல்லீரல் செயலிழப்பு என உலகெங்கும் நோய் பரவியதற்கு இந்த புலால் உணவே முழு முதற் காரணமாகும். எனவே மனிதன் கொடிய நோய்களில் சிக்கி துன்புற்று இறக்கிறான். புலால் உண்ணற்க, மது, கஞ்சா, புகைப் பிடித்தல் போன்ற தீய பழக்கங்களில் சிக்காமல் வாழ்வதே – தவத்திற்கு ஒப்பான வாழ்வாகும்.
 
மனிதன் நல்ல கல்வி அறிவில் சிறந்தவராய் இருந்தும் சாதி, சமய வழக்கில் சிக்கி – உயர்வு, தாழ்வு என்ற மனோபாவம் மேலோங்கி அகங்காரத்தால் அழிவதும் அதிகமாகி உள்ளது. இதை வள்ளற்பெருமான்,
 
சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
      சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித்த அலைகின்ற உலகீர்
      அலைந்தலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே
நீதியிலே சன்மார்க்க நிலை தனிலே ஞான
      நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர் அவர் தாமே
வீதியிலே அருட்ஜோதி விளையாடல் புரிய
      மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே.
 
என ஜாதிச் சண்டையிட்டு துன்புற்று மடிவோரைப் பற்றி எண்ணி எண்ணிப் பாடுகிறார். எனவே சாதி, மத உணர்வுகளில் சிக்காமல் வாழ்வது அவசியம். மனித குலம் அமைதியாக வாழ இதுவே ஒரு சிறந்த வழி.
 
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
      தம் உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
      யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம் பெருமான் நடம்புரியும்
      இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர் தம் அடிக்கேவல் புரிந்திட என்
      சிந்தை மிக விழைந்ததாலே.
 
உலகுயிர் அனைத்தையும் தம் உயிர் போல் பாவித்து உயிர் இரக்கத்தால் வாழ்பவரின் உள்ளம்தான் இறைவனின் இருப்பிடம் என்பதை தெளிவுப்படுத்துகிறார்.
 
அந்த தெய்வம் எப்படிப்பட்டது?
 
அருள்ஜோதி தெய்வம் என்னை ஆண்டு கொண்ட தெய்வம்
      அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட்சாரும் மறைகள் எலாம் போற்றுகின்ற தெய்வம்
      போதாந்தத் தெய்வம் உயர்நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம்
      எண்ணிய நான் எண்ணிவாறெனக்கருளும் தெய்வம்
தெருப்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
      சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
 
மிக ஆகாரஞ்செய்தல் - எவ்வித விருப்பமான உணவாயினும் முழு வயிறு நிரம்பும்படி உண்ணக்கூடாது.
 
மித போகஞ்செய்தல் - ஆண், பெண் தாம்பத்தியம் அளவுடன் கொள்ளுதல் (மாதம் இருமுறை)
 
மலஜல உபாதை வரும் போது - அதை அடக்காமல் உடன் நீக்குதல்.
 
உடல் நோய் வாய்ப்பின் நல்ல மூலிகை மருந்துகள் அல்லது யோகாசனம், மற்ற தந்திரங்களால் நோய் நீக்கிக் கொள்ளுதல்.
 
உலகியலார் சுக்கிலத்தை தேவையில்லாது செலவழித்தல் கூடாது. (இது பற்றிய முழு விபரங்களை அனுபவ சான்றோர்களிடம் கேட்டறியலாம்.)
 
தீவிரதரர் - எவ்விதத்தும் சுக்கிலம் வெளிப்படாது காத்தல்.
 
உச்சி - மார்பு - கோசம் - அங்கங்களை சூரிய ஒளி டாது வெள்ளை ஆடையில் மறைத்தல். உலகியலில் சஞ்சரிக்கும் காலத்தில் காலில் கவசம் தரித்தல் (செருப்பு அணிதல்) அழுக்காடை உடுத்தாதிருத்தல்.
 
கரண ஒழுக்கம்:
 
மனதை நமது புருவ மத்தியின் கண் செலுத்தி அதன்பின் உள்முகமாக (அதாவது நமது எண்ணங்களை நமது புருவ மத்தியில் செலுத்துதல்) சிற்சபை என்னுமிடத்தில் செலுத்திப் பழகுதல். துர்விசயத்தை பற்றாதிருத்தல்.
 
ஜீவதோசம் விசாரியாதிருத்தல் - பிறர் பற்றிய குற்றம் கேட்டறியாது இருத்தல், தன்னை மதியாதிருத்தல் - நான் படித்தவன், செல்வந்தன், பலமுள்ளவன் என்ற தன்முனைப்பு இல்லாமல் வாழப் பழகுதல்.
 
இவ்வாறாக இந்திரிய கரண ஒழுக்கங்களுடன், அனுதினமும் ஞான மூலிகையான வல்லாரை, கரிசாலை, முசுமுசுக்கை, தூதுவளை போன்ற மூலிகைகளை அடிக்கடி உண்ணுதல். அனுதினமும் காலையில் மஞ்சள் அல்லது வெள்ளை கரிசாலை கொண்டு சிறிது சாறு உள்ளே உண்டு, பின்பு ஆள்காட்டி விரலால் உள்நாக்கின் மேல் பாகத்தில் மெல்லென தேய்த்து கபம் நீக்கம் செய்ய வேண்டும். கபம் நீங்க, நீங்க மரணமும் தள்ளிப்போகும். மேலும், உரத்துப் பேசுதல், கடுநடை, ஓட்டம், அதிகமாக தூங்குதல் கூடாது. பகல் உணவு உண்ட பின் சிறிது நேரம் சற்றே படுத்து உறங்காது, ஓய்வெடுக்கலாம். இப்படி வாழ்ந்தால் நோயற்ற நல்ல ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.
 
அருள்நிலை அனுபவம் பெற என்ன செய்ய வேண்டும்?
 
கற்றேன் சிற்றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணை நெறி
உற்றேன் எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்
பெற்றேன் உயர்நிலை பெற்றேன். உலகில் பிறநிலையைப்
பற்றேன் சிவானந்தப் பற்றே என் பற்றெனப் பற்றினனே.
 
சிற்றம்பலக் கல்வியான இந்த சிற்சபை அனுபவமே பூரணநிலை அனுபவத்தைக் கொடுத்து முடிவாக இந்த மனித தேகம் மரணமில்லாப் பெருவாழ்வில் வாழும்படியான உயர்நிலையைத் தரும்.
 
இருப்பினும் உலகியலில் வாழ்பவர் உலகியல் துன்பங்களிலிருந்து விடுபட - கொலை, புலை தவிர்த்து -  ஏழை எளியவர்க்கு உணவு அளிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு (விரதமாகக் கொண்டு) வாழ்வது அவசியம். அப்படி வாழ்வதால் ஊழ்வினையால் ஏற்படும் துன்பமும், இவ்வுலக வாழ்வியலில் நமது அஜாக்கிரதையினால் ஏற்படும் இடர்பாடுகளிலிருந்தும் காப்பாற்றப்படுவார்கள்.
 
மேலும், நல்ல தொழில் வளம், நல்ல குழந்தைகளுடன் நலமுடனும், வளமுடனும் வாழலாம்.
 
காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே
      களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறுங்கனியே
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
      மேவுகின்ற பெரும் பயனாம் விளைவை எலாம் தருமச்
சாலையிலே ஒரு பகலில் தந்த தனிப்பதியே
      சமரச சன்மார்க்க சங்கத் தலை அமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்தாடும்
      மாநடத் தென் அரசே என்மாலையும் ஏற்றருளே
 
என வள்ளற் பெருமாள் ஜீவகாருண்யத்தின் மேன்மையை கூறுகிறார்.
 
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து.
 
என திருவள்ளுவரும் கூறுகிறார்.
 
ஜீவகாருண்யம் போற்றி வாழ்ந்து வாழ்வில் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ, சன்மார்க்கம் சார்வீர் ஜகத்தீரே!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

   சுத்த சன்மார்க்க அன்பன்
      பாலமுருகன்
  காஞ்சிபுரம்





--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)