Sunday, April 29, 2018

[vallalargroups:5954] Today Vallalar Poor Feeding On Behalf of Miss.Kalawathy Birthday @ Bangalore , K R Puram, Ramamurthy Nagar Area

செல்வி.கலாவதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு , ஆதரவு இல்லாத பசித்த ஏழைகளுக்கு உணவு கொடுக்கப்பட்டது.

செல்வி.கலாவதி அவர்கள் நீடுழி எல்லா நலமும் ,வளமும்  பெற்று வாழ வள்ளற்பெருமானிடம் பிராத்தனை செய்வோம்


[vallalargroups:5953] support Sticks to Needy @ Bangalore KRPuram

Support Sticks to Needy @ Bangalore KRPuram

Sponsored by Bangalore Vallalar Devotee thayavu. Damotharan &friends

Monday, April 23, 2018

[vallalargroups:5952] எம்மதத்தினருக்கும் பொருந்தும் கதை..

வாரியார் ஸ்வாமிகள் சொன்ன நல்லறிவு கதை.....கடவுளைக் காணத் தேவைப்படும் கண்ணாடிகள்!!!

ஒரு பெரியவர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார். அங்கே ஒரு மாணவன் சென்றான். அம்மாணவன் மிடுக்கும், சொல் துடுக்கும் உடையவனாகக் காட்சியளித்தான்.

"ஐயா! பெரியவரே! ஏன் உட்கார்ந்து கொண்டே தூங்குகின்றீர்? சுகமாகப் படுத்து உறங்கும்'' என்றான்.

"தம்பீ! நான் உறங்கவில்லை. கடவுளைத் தியானிக்கிறேன்.''

"ஓ! கடவுள் என்று ஒன்று

உண்டா? ஐயா! நான் எம்.ஏ. படித்தவன். நான் மூடன் அல்லன். நூலறிவு படைத்தவன். கடவுள் கடவுள் என்று கூறுவது மூடத்தனம். கடவுளை நீர் கண்ணால் கண்டிருக்கின்றீரா?''

"தம்பீ, காண முயலுகின்றேன்.''

"கடவுளைக் கையால் தீண்டியிருக்கின்றீரா?''

"இல்லை.'' "கடவுள் மீது வீசும் மணத்தை மூக்கால் முகர்ந்திருக்கின்றீரா?'' "இல்லை.''

"ஐயா! என்ன இது மூட நம்பிக்கை? உம்மை அறிவற்றவர் என்று கூறுவதில் என்ன தடை? கடவுளைக் கண்ணால் கண்டீரில்லை, மூக்கால் முகர்ந்தீரில்லை; கையால் தொட்டீரில்லை; காதால் கேட்டீரில்லை; இல்லாதவொன்றை இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு அரிய நேரத்தை வீணடிக்கிறீரே? உம்மைக் கண்டு நான் பரிதாபப் படுகிறேன். உமக்கு வயது முதிர்ந்தும் மதிநலம் முதிரவில்லையே? பாவம்! உம்போன்றவர்களைக் காட்சிச் சாலையில் வைக்க வேண்டும். கடவுள் என்றீரே? அது கறுப்பா, சிவப்பா?''

"அது சரி, தம்பீ! உன் சட்டைப் பையில் என்ன இருக்கின்றது?'' "தேன் பாட்டில்.'' "தேன் இனிக்குமா, கசக்குமா?'

"என்ன ஐயா! இதுகூட உமக்குத் தெரியாதா? சுத்த மக்குப் பிண்டமாக இருக்கின்றீர். உலகமெல்லாம் உணர்ந்த தேனை இனிக்குமா கசக்குமா என்று வினாவுகின்றீரே, உணவுப் பொருள்களிலேயே தேன் தலைமை பூண்டது. இது அருந்தேன். இதை அருந்தேன் என்று எவன் கூறுவான்? அதற்காக இருந்தேன் என்பான். தேன் தித்திக்கும். இதை எத்திக்கும் ஒப்புக் கொள்ளும்.'' "தம்பீ! தித்திக்கும் என்றனையே, அந்த இனிப்பு கறுப்பா, சிவப்பா! சற்று விளக்கமாக விளம்பு, நீ நல்ல அறிஞன்.'' மாணவன் திகைத்தான். தித்திப்பு என்ற ஒன்று கறுப்பா சிவப்பா என்றால், இந்தக் கேள்விக்கு என்ன விடை கூறுவது என்று திக்கித் திணறினான்.

"ஐயா! தேனின் இனிமையை எப்படி இயம்புவது? இதைக் கண்டவனுக்குத் தெரியாது! உண்டவனே உணர்வான்.''

பெரியவர் புன்முறுவல் பூத்தார். "அப்பா! இந்தப் பௌதிகப் பொருளாக, ஜடவஸ்துவாகவுள்ள தேனின் இனிமையையே உரைக்க முடியாது, உண்டவனே உணர்வான் என்கின்றனையே? ஞானப் பொருளாக, அநுபவவஸ்துவாக விளங்கும் இறைவனை அநுபவத்தால் தான் உணர்தல் வேண்டும்.

"தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?

வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!

தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்

ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!''

என்கிறார் பரம ஞானியாகிய திருமூலர்.

மாணவன் வாய் சிறிது அடங்கியது. "பெரியவரே! எனக்குப் பசிக்கிறது. சாப்பிட்டு விட்டு வந்து உம்முடன் உரையாடுவேன்.''

"தம்பீ! சற்று நில். பசி என்றனையே, அதைக் கண்ணால் கண்டிருக்கின்றனையா?'' "இல்லை.''

"என்ன தம்பீ! உன்னை அறிஞன் என்று நீயே கூறிக் கொள்கிறாய். பசியைக் கண்ணால் கண்டாயில்லை, மூக்கால் முகர்ந்தாயில்லை; கையால் தொட்டாயில்லை; அப்படியிருக்க அதை எப்படி நம்புவது? பசி பசி என்று உரைத்து உலகத்தை ஏமாற்றுகின்றாய். பசி என்று ஒன்று கிடையவே கிடையாது. இது சுத்தப்பொய். பசி என்று ஒன்று இருக்கிறது என்று கூறுபவன் முட்டாள். உனக்கு இப்போது புரிகின்றதா? பசி என்ற ஒன்று அநுபவப் பொருள். அது கண்ணால் காணக் கூடியதன்று. அதுபோல்தான் கடவுளும் அநுபவப் பொருள். அதைத் தவஞ் செய்து மெய்யுணர்வினால் உணர்தல் வேண்டும்.'' மாணவன் உடம்பு வேர்த்தது, தலை சுற்றியது. பெரியவர் கூறுவதில் உண்மை உள்ளது என்பதை உணர்ந்தான்.

"என் அறியாமையை உணர்கின்றேன். இருந்தாலும் ஒரு சந்தேகம், கடவுளைக் கண்ணால் காண முடியுமா?'' "உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி, தம்பீ! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?'' "என்ன ஐயா! என்னைச் சுத்த மடையன் என்றா கருதுகின்றீர்? எனக்கென்ன கண் இல்லையா? இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.''

"தம்பீ! நான் உன்னை மூடன் என்று ஒருபோதும் கருதமாட்டேன். நீ அறிஞன்தான். ஆனால் அறிவில் விளக்கந்தான் இல்லை. கண் இருந்தால் மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும். காது இருந்தால் மட்டும் போதுமா? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும். அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருத்தல் வேண்டும். உடம்பை நீ பார்க்கின்றாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா?''

"ஆம். நன்றாகத் தெரிகின்றது.'' "அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?'' "என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை முறை கூறுவது? எல்லாந்தான் தெரிகின்றது?'' "அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?''

"ஆம்! தெரிகின்றன.'' "முழுவதும் தெரிகின்றதா?'' அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில் "முழுவதும் தெரிகின்றது'' என்றான்.

"தம்பீ! உடம்பின் பின்புறம் தெரிகின்றதா?'' மாணவன் விழித்தான்.

"ஐயா! பின்புறம் தெரியவில்லை.'' "என்ன தம்பீ! முதலில் தெரிகின்றது தெரிகின்றது என்று பன்முறை பகர்ந்தாய். பின்னே பின்புறம் தெரியவில்லை என்கின்றாய். நல்லது, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா?''

"முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.'' "அப்பா! அவசரங்கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையும் காண்கின்றனையோ? நிதானித்துக் கூறு....''

"எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம் தெரிகின்றது.'' "தம்பீ! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா? நன்கு சிந்தனை செய்து சொல்.''

"ஆம்! நன்றாகச் சிந்தித்தே சொல்கின்றேன். முன்புறம் எல்லாம் தெரிகின்றது.'' "தம்பீ! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றா?

மாணவன் துணுக்குற்றான். நெருப்பை மிதித்தவன் போல் துள்ளினான். தன் அறியாமையை உன்னி உன்னி வருந்தலானான். தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், "ஐயனே! முகம் தெரியவில்லை!'' என்றான்.

"குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை. முகம் தெரியவில்லை. நீ இந்த உடம்பில் சிறிதுதான் கண்டனை. கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய். அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும், சொல்.'' "ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.''

"தம்பீ! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவதுபோல், ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.'' "ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன? சொல்லுங்கள். இப்போதே வாங்கி வருகின்றேன். பெல்ஜியத்தில் செய்த கண்ணாடியா?''

"அப்பனே! அவை பெல்ஜியத்தில் செய்ததன்று. வேதாகமத்தில் விளைந்தவை. ஞானமூர்த்தியைக் காண இருநிலைக் கண்ணாடிகள் வேண்டும். ஒரு கண்ணாடி திருவருள், மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள் குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவான இறைவனைக் காணலாம்.

"தம்பீ! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனை குருவருள் மூலமே பெற வேண்டும். திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை.'' என்று முடித்தார்.

Wednesday, April 4, 2018

[vallalargroups:5950] ஞானசரியை

அருட்பெருஞ்ஜோதி !
            அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
            அருட்பெருஞ்ஜோதி !
               ஞான சரியை
                      ********
         ஆன்மநேய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவோடு தெரிவித்து மகிழ்கின்றேன்.

       நமது திருவருட்பிரகாச வள்ளற் பெருமான் இவ்வுலகவர்களின் புறக்கண்ணுக்கு தெரியாத வண்ணம் அருட்பெருஞ்ஜோதியில் கலந்து நிறைந்து நமது அகத்தில் வந்தமர்வதற்கு முன்பு,
  நம் அனைவரையும் உய்விக்கும் பொருட்டு திருவருட்பா ஆறாம் திருமுறையில் "ஞான சரியை" யில் குறிப்பிட்டுள்ள வண்ணம் நீங்கள் அனைவரும் ஆண்டவரை வழிபட்டுவாருங்கள் என்று அறிவுறுத்தினார்கள்.

   ஞானசரியை என்பது ,
சித்தர்கள் வகுத்த இறைஒழுக்கங்களான சரியை கிரியை யோகம் ஞானம் என்ற 16படிகளில் வருகின்ற 13 வது படியாகவும் கொள்ளலாம்,
அல்லது எல்லாம் வல்ல கடவுளது "மெய்யறிவை" அடைவதற்குரிய பக்குவத்தை பெறுவதற்கு நமது "அறிவை ஒழுக்கப்படுத்துவதற்கு"
"நெறிப்படுத்துவதற்கு" உரிய வழிப்பாட்டுமுறைகள் என்றும் கொள்ளலாம்.

     அப்படி நம்பொருட்டு பெருமான் 
தயவுடன் கொடுத்தருளிய ஞானசரியை பதிகத்தின் முதல் பாடலின் பொருளை ஒருவாறு எனது சிற்றறிவில் உதித்துவித்த வண்ணம் இங்கே தங்கள் அணைவரிடமும் பகிர்ந்துகொள்கின்றேன்.

   இப்பாடலில் இரண்டு முறை வருகின்ற வார்த்தைகள் எல்லாம் அடுக்குத்தொடர் வார்த்தைகள் என்று நினைத்தல் கூடாது , அவை ஒவ்வொன்றும் மாறுபட்ட இரண்டு பொருளை உணர்த்தக்கூடியவைகள்
என்பதை உணர்வோம்.
பாடல்;
நினைந்து நினைந்து ;
***********************
            ஆன்மாக்களாகிய நாம் ஆண்டவரை வழிபடும்போதும் மட்டுமல்ல மற்ற எல்லா சமயங்களிலும் நமது சிறுமைகுணத்தை முதலில் வெளிப்படுத்தி பிறகு இறைவனின் பெருமைகளை போற்றவேண்டும்,
வள்ளல் பெருமான் திருவருட்பா பாடல் ஒவ்வொன்றிலும் கவணித்தோமானால் தன்னைக்காட்டாத வண்ணம் ,
நான் எனது என்ற "தற்போத" அகங்காரத்தை எழும்பவிடாத வண்ணம் ,
நாயினும் கடையேன்,
ஈயினும் இழிந்தேன்,
புன்னிநிகர் இல்லேன்,
மலத்தில் புழுத்த புழுவினும் சிறியேன்,
இன்னும் எவ்வளவோ சிறுமையான வார்த்தைகளால் முதலில் தன்னைத்தானே இழிவாகச் சொல்லி பிறகு இறைவனை போற்றி புகழ்வார்கள்.    
     அதுபோன்றே நாமும் நமது சிறுமைகளாகிய குற்றங்களை முதலில் நினைத்தும் பிறகு ஆண்டவனின் பெருமையை நினைத்தும் ஆண்டவரை வழிபடுதல் வேண்டும் என்பதாம்.

உணர்ந்து உணர்ந்து ;
***********************
          ஆண்டவரை கலைகளால் உணர்வது ஒன்று அனுபவத்தால் உணர்வது ஒன்று,
அதாவது படித்த சாத்திரத்தாலும்,
தோத்திரத்தாலும்,
பிறர் சொல்லக்கேட்ட 
கேள்வி ஞானத்தாலும், இறைவனை ஆராய்ந்து அறிந்து உணர்வது என்பது ஆண்டவனை "சாத்திரத்தால் உணர்வது" என்பதும்
 "சாத்திர ஞானம்" என்றும் "படிப்பறிவும்" என்பதுமாகும்.
    மற்றொன்று ஆண்டவரை படித்த சாத்திரத்தாலும் ,பிறர் சொல்லக்கேட்ட ஞானத்தாலும் அறிந்து "அனுபவித்து உணர்வது" என்பதாகும் .
இது "அனுபவ ஞானம்" "அனுபவ அறிவு".என்பதாகும்.

இங்கு அறிவது என்பது ஆராய்ச்சி,
உணர்வது என்பது அனுபவம்;
இறைவன் அனுபவத்தில் விளங்குபவராய் இருப்பதால் அனுபவஞானமே சிறந்தது என்பதாகும்;

நெகிழ்ந்து நெகிழ்ந்து ;
*************************
ஆண்டவரை வழிபடும் போது முதலில் உள்ளமாகிய மனம் நெகிழ்தல் வேண்டும் பிறகு உயிராகிய ஆன்மா நெகிழுதல் வேண்டும் .
ஆன்மா நெகிழ்ந்தால்தான் அதனுள் இருக்கின்ற இறைவனை நமது அன்பாலும் அழுகையாலும் நெகிழ்விக்க முடியும்.
வள்ளல் பெருமான் பிள்ளபெறுவிண்ணப்பத்தில் ஒருபாடலில் ,
"நிருத்தனே நின்னை துதித்தபோதெல்லாம் நெகிழ்ச்சி இல்லாமையால் ,பருத்த எனது உடம்பை பார்த்திடற்கு அஞ்சி ஐயோ படுத்தனன் எந்தாய்" என்பார்கள்;

ஆகலில் மனம் நெகிழ இறைவனை வழிபடுதலைக்காட்டிலும்,
ஆன்மா நெகிழ இறைவனை வழிபடுதலே சிறந்ததாகும்;

அன்பே நிறைந்து நிறைந்து;
*******************************
  அன்பு என்பது இரண்டுவகையாக உள்ளது ,
1:காமிய அன்பு,
2: நிஷ்காமிய அன்பு.

        காமிய அன்பு என்பது ஏதோ ஒரு பொருளின் பொருட்டோ அல்லது ஒரு பயனை எதிர்பார்த்தோ ஒருவரிடம்
அன்புகொள்ளுவது என்பது காமிய அன்பு என்பதாகும். 
காமியம் என்பது செயல் அல்லது வினை என்ற பொருள்படும்.

     நிஷ்காமிய அன்பு என்பது எதையும் எதிர்பார்க்காமல் ஆன்மநேயத்தோடு மற்றவர்கள் மீது அன்புகொள்வது என்பதாகும்.
இதேபோன்று இறைவனை வழிபடும்போதும் முதலில் ஏதோஒன்றுஎதிர்பார்த்து பிறகு எதையும் எதிர்பார்க்காமல் இறைநேயத்தோடு அன்பு செலுத்துவது என்பதாகும்.
     காமிய அன்பு மாறக்கூடியது,
நிஷ்காமிய அன்பு என்றும் மாறாதது,
வள்ளல் பெருமான் நமது ஆண்டவர்மீது மாறாஅன்புகொள்வீர் என்பார்கள்;
ஆகலில் நிஷ்காமிய அன்பே சிறந்தது என்பதாகும்.

ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து,
******************************
        மேற்கூறிய வண்ணம் ஒரு ஆன்மா, தனது சிறுமையை நினைத்தும் உணர்ந்தும் நெகிழ்ந்தும் வருந்துகின்றபோது ,கண்ணீர் பெருக்கெடுத்து வெளிவரும் அது முதலில் அழுகை கண்ணீராக வருகின்றது ,
பிறகு இறைவனின் பெருமையை நினைத்தும் உணர்ந்தும் நெகிழ்ந்தும் இறைவனையே பற்றி வருந்துகின்றபோது ஆணந்தகண்ணீர் வருகின்றது,
இந்த இரண்டு கண்ணீரும் பெருக்கெடுத்து உடம்பு நனைக்கப்படுகின்றது;
இந்த அனுபவத்தை வள்ளல் பெருமான் அருட்பெருஞ்ஜோதி அகவலில் 1460வது வரிகளில்,
"உண்ணகை தோற்றிட உரோமம் பொடித்திடக் கண்ணீல் நீர் பெருகிக் கால்வழிந்து ஓடிட" என்று தெரிவித்து
நமக்கு வெளிப்படுத்துவார்கள்;

அருளமுதே நன்னிதியே ஞானநடத்தரசே என்னுரிமை நாயகனே என்று வனைந்து வனைந்து
ஏத்துதும்நாம் வம்மின் உலகியலீர்.
*****************************************
 மேற்கூறிய வண்ணம் அழுது தொழுது கண்ணீர் பெருகி உடம்பெல்லாம் நனைய அருளாகிய அமுதத்தை வழங்கக்கூடிய அருளமுதமே,
இவ்வுலகமெல்லாம் தழைத்து இன்பம்பெற ஞான நடம்புரிகின்ற அரசே,  எழுபிறப்பிலும் எனது உயிருக்கு உற்றதுணையாக வருகின்ற என்உரிமையுடைய தலைவனே என்று எண்ணத்தாலும் சொல்லாலும் அலங்கரித்து அலங்கரித்து துதித்து வணங்கிடுவோம் வாருங்கள் உலகவரே என்று இந்த உலகத்தில் உள்ளவர்கள் அனைவரையும் அழைக்கின்றார்கள் நமது பெருமான்.

மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்,
*******************************
   மேற்கூறியபடி ஆண்டவரை நினைந்து,உணர்ந்து,நெகிழ்ந்து,அன்புநிறைந்து நிறைந்து ஊற்றெழுந்து வருகின்ற கண்ணீரால் உடம்பு நனைந்து நனைந்து வருந்தி துதித்து வணங்கினால் மரணத்தை வென்று இவ்வுலகில் நிலையாக வாழக்கூடிய அருட்பெருவாழ்வு பெற்று வாழ்ந்திடலாம் கண்டீரோ என்கின்றார்கள்.

புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.
*************************************
     உலகவர்களே நான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய பிள்ளை என்பதற்காகவும் ,
அவர் எனது தந்தை என்பதற்காகவும் ஒருதலையாக நின்று ஆண்டவரைப்பற்றிய வார்த்தைகளால் இங்கு சிறப்பித்து அழகுபடுத்தி பெருமைப்பட சொல்லவேண்டும் என்று பொய் சொல்லவில்லை ,
சத்தியமாகவே சொல்லுகின்றேன் உலகவரே,
இந்ததருணம்தான் பொற்சபை சிற்சபை என்று சொல்லக்கூடிய பரமாகாச்திலும் சிதாகாசத்திலும் புகுந்துகொள்ளக்கூடிய தருணமாக இருக்கின்றது ஆகலில் விரைந்து வாரீர் என்று உலகவரை அன்போடும் ஆவலோடும் அழைக்கின்றார்கள் நமது பெருமான்;
சுத்தசன்மார்க்கமே சிறந்தது;
சுத்தசன்மார்க்கமே நிலைப்பது;
என்றுணர்ந்து அணைவரும் வாரீர் ;
....நன்றி,
.......வள்ளல் மலரடிப் போற்றி போற்றி,
........பெருமான் துணையில்,
.........வள்ளல் அடிமை,
...........வடலூர் இரமேஷ்;

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)