Thursday, March 15, 2018

[vallalargroups:5944] ஜீவகாருண்யம் ..உலக அவத்தைகள் ஏழு.

அருட்பெருஞ்ஜோதி !
               அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
                அருட்பெருஞ்ஜோதி !
        உலக அவத்தைகள் ஏழு.
             ********************
          ஆன்மநேய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன்.

      இவ்வுலகில் மனிதப் பிறப்பு எடுத்து வாழவந்த ஆன்மாக்கள் அனைவரும்,
முற்பிறவிகளில் செய்த வினைகளின் பலனாகவும், அவ்வினைகளுக்கு உரிய தண்டனைகளாக ,
1 பசி,
2 தாகம்,
3 பிணி,
4 எளிமை
5 இச்சை,
6 பயம்,
7 கொலை என்ற ஏழுவகையான துன்பத்தால் மிகவும் அவத்தையுறுகின்றார்கள் என்பதையும், அவற்றைப்பற்றிய ஒரு சிறு விசாரத்தை கேள்வியும் பதிலுமாகப் பார்ப்போம்;

   1 இவ்வுலகில் மனிதத்தேகம் பெற்று வாழவந்த என்னைப்போன்ற மானுட ஆன்மாக்கள் ஏழுவகையான துன்பத்தால் அவத்தையுறுவதற்கு என்னக் காரணம் ?
  ...... அறிவு ஒரு சிறிதும் விளங்காமல் அஞ்ஞானம் என்னும் பேரிருளில் மூழ்கிக் கிடந்த ஆன்மாக்களாகிய நமக்கு எல்லாம் வல்ல தனிப்பெரும்பதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனது "சச்சிதானந்த தன்மையை "எல்லா ஆன்மாக்களுக்கும் உணர்த்தி அத்தன்மையை எல்லா ஆன்மாக்களும் அடையும்பொருட்டு "மெய்யறிவு ஆனந்தம்" விளக்கம் பெறவேண்டி அறிவற்று கிடந்த நமக்கு முதன்முதலில் ஓரறிவு தாவரமாகவும் பிறகு ஈரறிவு நத்தை ,சங்கு,சிப்பி போன்றும் மற்றை மூவறிவு நான்கறிவு ஐந்தறிவு என உறுவன,ஊர்வன,பறப்பன,நடப்பன என்று நான்கு வகையான பிறப்புகளைக் கடவுள் படைத்து ஐந்தறிவு விலங்குகள் வரை பலப்பிறவிகள் எடுத்து எடுத்து பிறந்து இறந்து இறுதியில் இப்பொழுது நாம் எடுத்துள்ள இந்த ஆறறிவு விளங்கும் மானுடப் பிறவி கடவுள் பெருங்கருணையால் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பிறவியில்தான் நன்மை தீமைகளை ஆராய்ந்து பார்க்கக்கூடிய ஆறாவது அறிவாகிய பகுத்தறிவு கொடுக்கப்பட்டுள்ளது.

   இப்பகுத்தறிவைக்கொண்டுதான், தான் யார் என்பதையும், தனக்குதேகம்கொடுத்து ஆளுகின்ற கடவுள் யார் என்பதையும், அக்கடவுளை அடையும் தன்மை எவ்வாறு என்பதையும் நமக்கு வழங்கப்பட்டுள்ள பகுத்தறிவைக்கொண்டு ஆராய்ந்து அறிந்து அடைதல்வேண்டும்.

     இதன்பொருட்டு முற்பிறவிகளில்  கடவுள் வகுத்த அருள்நியதிப்படி வாழாமல்  ஜீவகாருண்யமற்று கடின எண்ணம்கொண்டு இரக்கமற்று மற்றை உயிர்களுக்கு கேடுவிளைவித்து பாவவினைகளை கட்டி சேர்த்துக்கொண்டு வந்ததன் விளைவாக , அவ்வினைகளுக்கு உரிய பலனை அனுபவிக்கும் பொருட்டு ,செய்த ஒவ்வொரு வினைக்குத் தக்கவாறு நாம் ஏழுவிதமான அவத்தைகளை இப்பிறவிகளில் அனுபவிக்கின்றோம்;

     1 பசிக் கொடுமையை எதனால் அனுபவிக்கின்றோம் ?
   திணைவிதைத்தவன் திணையறுப்பான், வினை விதைத்தவன் வினையறுப்பான் என்பது போன்று , முற்பிறவியில் சிறிதும் இரக்கமில்லாமல் நம்மைத் தேடிவந்து ஆகாரம் கேட்டவர்களுக்கு ,
     சாதி சமய மத இனம் குலம் ஆச்சாரம் என்று பேதம்பார்த்து சிறிதும் இரக்கம் இல்லாமல் இல்லை என்றுசொல்லி தயவற்று அவர்களை விரட்டியடித்ததும், 
    தம்மிடம் வேலைசெய்பவர்களுக்கு காலத்தே ஆகாரம் கொடுக்காமல் பட்டிணியோடு வேலை வாங்கியதும்,
      போதுமான அளவிற்கு ஆகாரம் கொடுக்காமல் அரைவயிற்றிற்கும் கால்வயிற்றிற்கும் ஆகாரம் கொடுத்ததும்.
        நமது பயன்கருதி நமது வீட்டில் வளர்த்து வந்த தாவரங்களுக்கும், ஆடு மாடு கோழி குதிரை யானை போன்ற வாயற்ற ஜீவன்களுக்கு காலத்தே ஆகாரம் கொடுக்காமலும்      மேலும் அலட்சியம் செய்து அரைவயிற்றுக்கு உணவு கொடுத்து முழு வேலை வாங்கியதும்  ஆகிய பசியால் பரிதவித்த ஜீவன்களுக்கு பசியாற்றுதல் செய்யாத இரக்கமற்ற ஆன்மாக்கள் இப்பிறவிகளில் அதே பசி அவத்தையை தானும் அனுபவிப்பார்கள் என்பதை சத்தியமாக அறிதல் வேண்டும்.

2:தாகத்தினால் எப்படி துன்பப்படுகின்றோம் ?
   மேற்கூறியது போன்றே நம்மிடம் நாடி வந்து ஒருவாய் தண்ணீர் தாகத்திற்கு கேட்பவர்களுக்கு இரக்கமில்லாமல் சாதி மதம் சமயம் ஆச்சாரம் இனம் குலம் என்ற பேதம் பார்த்து தீண்டத்தகாதவனாக எண்ணியும் இரக்கமற்றும் தண்ணீர் கொடுக்க மறுத்தும் ,
அதுபோன்று நமது பயன்கருதி நமது வீட்டில் வளர்க்கின்ற தாவரங்களுக்கும் ஆடு மாடு கோழி குதிரை போன்ற வாயில்லா ஜீவன்களின் தாகமறிந்து அவைகளுக்கு தண்ணீர்கொடுக்காமல் இரக்கமற்று நடந்துகொண்ட கடின சீவர்கள் அதே போன்ற தாக அவத்தையை இப்பிறவியிலும் அனுபவிப்பார்கள் என்று சத்தியமாக அறிதல் வேண்டும்.
    
3 பிணியினால் படுகின்ற அவத்தையும் இப்படித்தானோ ?
    நிச்சயமாக அப்படித்தான் ,
மற்றவர்கள் துன்பத்தைக்கண்டு வருந்தாமல் அவர்களை கேளி செய்வதும், மருத்துவசெலவிற்காக பொருளுதவி கேட்கும்போது இல்லை என்றுசொல்லி வஞ்சகத்துடன் நடந்துகொள்வதும், 
அவர்கள் இப்பிணியினால் இறந்தால் நமக்கு லாபம் என்ற தயவற்று உள்ளொன்று புறமொன்றாய் நடிப்பதும்,
மருத்துவ செலவிற்கு பணம்கொடுப்பது போன்று கொடுத்து வட்டிமேல் வட்டியிட்டு அவர்களின் வீடு மனையை அபகரித்து அவர்களை கதற கதற வெளியேற்றியதும்,
      பகைமையை மனதில் கொண்டு மற்றவர்கள் வளர்த்துவரும் வாயற்ற ஜீவன்களை விரட்டி அடித்தும், கை கால்களை அடித்து உடைப்பதும்  ஆகிய துன்பங்களை செய்த ஆன்மாக்கள் இப்பிறவியிலும் அதேபோன்ற பிணி அவத்தைகளால் துன்பப்படுவார்கள் என்பதையும் திண்ணமாக அறிதல் வேண்டும்.
  
4 எளிமை என்ற வறுமை எதனால் ஏற்படுகின்றது ?
  ஆன்மாக்களினுடைய உட்பகைகளாக இருக்கின்ற ,
காமம் 
குரோதம்
லோபம்
மோகம்
மதம்
மார்ச்சரியம் என்ற இந்த ஆறுவகை தீயகுணங்களால் மற்றவர்களை துன்புறுத்தி அவர்களை ஏமாற்றி 
அவர்களுக்குரிய உடைமைகளைப் பறித்தல், கடவுள் வகுத்த அருள்நியதிப்படி நடவாமல் ஜீவகாருண்யமற்று( இரக்கமற்று )
நடந்து அவ்வுயிர்களுக்கு கேடுவிளைவித்தமையால் ,
       இப்பிறவியில் அவர்கள் தனது சுதந்திரம் எதுவும் இல்லாமல் வறுமையில் மிகுந்த துன்பத்தை அனுபவித்துக்கொண்டு மற்றவர்களை எதிர்பார்த்து வருத்தத்துடன் வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பதை உறுதியாக அறிதல் வேண்டும்.

5: இச்சை என்ற ஆசையும் இதுபோன்றுதானோ ?
     நிச்சயமாக,.... நம்மிடம் எல்லா வசதிகளும் இருந்தும் , தன்னைச் சார்ந்திருப்பவர்களிடமும் மற்றவர்களிடத்தும் கரிமித்தனத்துடன் லோபமாக பணம் செலவுசெய்வதற்கு யோசித்து அவர்களுக்கு காலத்தில் அனுபவிக்கவேண்டிய இச்சைகளை நிறைவேற்றாமல் , 
        கொடுக்கும் குணம் சிறிதும் இல்லாமல் மற்றவர்களுடைய இச்சைக்கு தடையாக இருப்பதுமட்டுமின்றி , கொடுக்கின்ற மற்றவர்களையும் கொடுக்கவிடாமல் தடுப்பதும் , தனக்குப் பிள்ளை இல்லை என்றபோதும் , வறுமையில் வாழும் திருமணமாகாத பெண்பிள்ளைகளுக்கு அவர்களின் பருவ இச்சை அறிந்து , காலம் கருதி அவர்களுக்கு இரக்கத்துடன் திருமணஉதவிகள் செய்யும் குணம் சிறிதும் இல்லாது லோபமாய் வாழ்ந்த ஆன்மாக்கள் அனைவறும் இப்பிறவியில் விருப்பப்பட்ட எந்தவித சுகத்தையும்
அடையமுடியாமல் அவத்தையுறுவார்கள் என்று சத்தியமாக அறிதல் வேண்டும்.

6:  பயம்  என்ற கொடிய அவத்தை எதற்காக ?
 அதுவும் ஜீவகாருண்யமற்ற செயல்களால் நடந்துகொண்டமையால்தான் அனுபவிக்கின்றோம்.
  ஆம் பயந்து ஓடுபவர்களை பகைவருக்கு காட்டிக்கொடுப்பது,
    வாங்கிய கடனுக்கு பயந்து,
கொடுக்க வழியில்லாமல் அவமானப்பட்டு ஒளிந்து மறைந்து கொள்பவர்களை , சிறிதும் இரக்கமில்லாமல் காட்டிக்கொடுத்து அவர்களின் அவமானத்தில் இவர்கள் ஆனந்தப்படுவது,

     ஆடு கோழி நாய் பூனை முதலிய வாயற்ற ஜீவன்களை உயிர் பயம் வெளிப்பட அலறியடித்து ஓட ஓட விரட்டி கல்லாலும் கட்டையாலும் கூறிய ஆயுதத்தாலும் அடிப்பதும் வெட்டுவதும் ஆகிய இரக்கமற்ற கொடுஞ் செய்கைகளால் இப்பிறவியில் அவர் அதேபோன்று பயத்துடன் வாழநேரிட்டது என்பதை அறிந்திடல் வேண்டும் ;

7 கொலை என்ற கொடிய வினைக்கும் இதுதான் காரணமா ?
    சத்தியமாக , உயிர்கள் அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டவைகள்,
அந்த உயிர்களை படைப்பதற்கும் அழிப்பதற்கும் அவருக்கு மட்டுமே உரிமை உண்டு. 
ஒரு உயிரை படைக்க முடியாத நமக்கு அந்த உயிரை எடுப்பதற்கு மட்டும் உரிமை எப்படி உண்டு.
      இதை உணராமல் நம்மைப் போன்றே இவ்வுலகில் வாழ்வதற்காக கடவுளால் படைக்கப்பட்ட உயிர்களை ஜீவகாருண்யம் சிறிதும் இல்லாமல்  தோலுக்காகவும், இறைச்சிக்காகவும், பகைமைக்கொண்டும், கொன்று அழிப்பது என்பது அருள்நியதிக்கிடையாது அது பாவத்தில் எல்லாம் தலையானது ஆகும்;

    இதுபோன்ற செய்கைகளாலேயே 
முழுமையாய் இப்பூமியில் வாழப் பிறவி எடுத்த மனிதர்கள் அற்ப ஆயுளில் பிணியாலும், வாகன விபத்துகளாலும், மற்றும் இயற்கை அழிவாலும், தற்கொலையாலும்,பகைமைகளாலும்  ஒருவருக்கொருவர் பொறாமைக்கொண்டும் கிடைப்பதற்கரிய மானிடப் பிறவி எடுத்தும் வாழ இயலாமல் அற்ப ஆயுளில் காலத்தை முடித்துக்கொள்கின்றோம் என்பதை உணர்தல் வேண்டும்.

8: அப்படி என்றால் இப்பிறவியில் மனிதர்கள் படும் இந்த ஏழுவகை துன்பதற்கும் காரணம் அவரவர்களேதனோ ?
    நிச்சயமாக நன்மையும் தீமையும் பிறர் தர வாராது;
   ஆகலில் இந்த அனைத்து துன்பத்திற்கும் நாமேதான் காரணம்;
அதுபோன்று நமக்கு கிடைக்வேண்டியதை மற்றவர்கள் தடுத்து கெடுத்துவிட்டார்கள் என்பதுவும் அறியாமை;
நமக்கு கிடைக்க வேண்டியப் பொருள் முற்பிறவி வினையால் அவர்களால் தடுக்கப்பட்டது என்பதுதான் உண்மை;

  அதே போன்று செய்வினைகள் என்று சொல்லி பணத்தை விரையம் செயவதும் அறியாமைதான்;
  நமக்கு எப்போதும் மற்றவர்களால் வினைசெய்ய இயலாது , நாம் முன்செய்த வினைதான் அதுபோன்று  நினைக்கச் செய்யும் என்பதை அறிதல் வேண்டும்.

    ஆனால் மேற்கூறிய அனைத்து வினைகளுக்கும் பரிகாரம் ஒன்று உண்டு ,
என்னவென்றால் , அதுதான் "ஜீவகாருண்யம்" அதுதான்  அதற்கு பரிகாரம்.

 ஆம் முற்பிறவியில் ஜீவகாருண்யமற்ற செய்கைகளால் இப்பிறவியில்
வினையை அனுபவிக்கின்ற நாம் 
அதே ஜீவகாருண்யத்தால்தான் அனைத்து வினைகளையும் போக்கிக்கொள்ளவேண்டும்;
இதுதான் "கடவுள் நியதி";
........நன்றி,
...........வள்ளல் மலரடி வாழ்க வாழ்க,
............பெருமான் துனையில்,
.............வள்ளல் அடிமை,
................வடலூர் இரமேஷ்;

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)